Friday, November 27, 2009

அத்வைத தாம்பத்யம் (5)

பக்தி யோகம்
பகுதி 5

‘நிலவின்’ நினைவுகளோடும்
நிஜங்களின் கனவுகளோடும்
நகர்ந்த
அந்த இரவுகளில்
நித்திரை நிர்மூலமாகிவிட்டது
நிரந்தரமாக..!

“யாரவள்??
ஏன் என்னிடம் முகம் சுளித்தாள்..??”

எப்படி யோசித்தாலும்
முடிவு ஒன்றுதான்..
எப்படியாவது பேசிவிடவேண்டும்
அவளிடம்..!

இமைகள் இளைப்பாறும்
முன்னே
சேவல் கூவியது..
இரவு நிறம் மாறும்
முன்னே
ஆவல் மீறியது..!

விடிந்தும் விடியாத
பொழுதில்
வேட்டைக்குக் கிளம்பும்
நாய்போல..
அவள் நினைவுகளால்
வேகமாய் நடந்தேன்..
நூலகத்தைத் தேடி..

வகுப்புக்களுக்குச் செல்லாதது
வாடிக்கையாகி விட்டதால்..
அன்றும்
வாசற்படி தவம்..!

சிற்றுண்டியைக் கூட
மறந்துவிட்டு..
வார்த்தைகளை
செதுக்கிக் கொண்டிருந்தேன்..

அவளிடம்
என்ன பேசுவது..?

பேசுவாளா..?
இல்லை..
பேசாமல் ஏசுவாளா?
இல்லை..
கண்டும் காணாமல்
என்னைக் காயப்படுத்துவாளா..?

அன்றுவரை..
எந்த பெண்ணிடமும்
பேசியதில்லை நான்..
பேசிய பெண்களையும்
மதித்ததில்லை..!

இன்று மட்டும்,
அவளின் மொழி கேட்க
ஏன் இந்த தாகம்..?
அவளின் விழி நோக்க
ஏன் இந்த தாபம்..?

இளமையின்
இரத்ததின் வெப்பம்
உயிரைச்
சொட்டு சொட்டாய்ச்
சுடும் வலி உணர்ந்தேன்..
அந்த வலியில்
ஒருவித
சுகம் கண்டு வியந்தேன்..

அன்று முதல்
அந்த வலிக்காய்
தவம் கூட கிடந்தேன்..!
அதுதான்
காதல் வலி என்று
பின்னாளில் உணர்ந்தேன்..!!!

அதோ..
காத்திருந்த தாமரைக்கு
கதிரவனின் ஒளிபோல்
அவளின் வருகை..!

அருகே வந்தாள்..
முகத்தில்
வெறுப்புக்கு மாறாக
புன் முறுவல்..!

என்னைக் கண்டதும்
முகம் சுழிப்பாள்
என்று இருந்தேன்..
இதழோரம்
சிரிப்பைச் சிந்தி
என்னைச் சாகடித்தாள்..!

எதார்த்தமாய்ப் பேசி
என்னை
ஏகாந்த இனிமையில்
மூழ்கடித்தாள்..

ஒரு வார்த்தைப்
கூறுவாளோ என்றிருந்தேன்..
ஒரு
கோரிக்கையே வைத்தாள்..!!!

-அவளின் கோரிக்கை அடுத்த பகுதியில்

K.கிருஷ்ணமூர்த்தி

Wednesday, October 14, 2009

தீபாவளி

தீபாவளி

இன்று
தீபங்களின் திருவிழா...
வெளிச்சத்தின்
வெற்றி விழா..
ஆம்..
இன்று தீபாவளி...?

தீபாவளி என்ன..
உயிர்வதை செய்தவனுக்காய்
ஆண்டுக்கொருமுறை
கொண்டாடப்படும்
கோலாகல
நினைவாஞ்சலியா?!

பாவி,
அவன் பாவம் தொலைய
பாக்கெட் காலியாக
நாம் தரும்
பண்பாட்டு
இலஞ்சமா?!

அரக்கன் அழிந்தாலும்
அவன் குணம் மட்டும்
இங்கே இன்னும்
பாட்டில்களிலும்
அரிவாள்களிலும்
பத்திரமாக..

இருக்கும் காசையெல்லாம்
வாரி இறைத்துவிட்டு
வயிற்றில் ஈரத்துணி
கடைசியாக..

ஒழிந்தது ஒரு நரகாசுரன்..
இங்கே,
தினம் தினம் பிரசவம்
புதுப்புது
நரகாசுரர்கள்..!!

***

வித வித இனிப்புகள்
பலவித பண்டங்கள்
இறைச்சி எல்லாம் உண்டு
வாங்க வாங்க..
Diabetes, BP,
கொலஸ்ட்ரோல்..
எல்லாம் இங்கே இலவசம்
வாங்கி போங்க..

இதுதான் தீபாவளியா?

இதற்காகவா..?
இந்த அவலத்துக்காகவா
இத்தனை அலங்காரம்?
****
துவண்டிருந்த
திரியை தூண்டிவிட்டு
பின் தீக்கிறையாக்குவதா
தீபாவளி..?

இல்லை,
எரிவது உடம்பென்று
தெரிந்தும்
உலகுக்கு ஒளி தரும்
திரியின் தியாகத்தை
போற்றுவதே தீபாவளி..!!!

கோடி தீபங்கள்
சுடர் தந்தாலும்
உள்ளத்தின் இருளில்
சுடரின் சேவை
செல்லாக் காசுதான்..

இனியாவது,

தீபாவளிக்கு
நல்லெண்ணெய் மட்டும்
தேய்ப்பதை விட்டுவிட்டு
நல் எண்ணங்களை
தேய்த்துக்கொள்வோம்..

திரியை மட்டும்
எரிப்பதை விட்டுவிட்டு
உள்ளொளியை
ஏற்றிக் கொள்வோம்!

-K.கிருஷ்ணமூர்த்தி

தித்திக்கும் தீபாவளி

அண்மையில் நடந்து முடிந்த தீபாராகா பாடல் இயற்றும் போட்டியில், எங்களின் பாடல் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று, CELCOM-இன் குறுஞ்செய்தி போட்டியில் மலேசிய மக்களால் சிறந்த பாடலாக தேர்வு பெற்றது. இந்த பாடல், தீபாவளி அன்று அனைத்து celcom கைத்தொலைபேசிகளின் call me ringtone ஆக உலகம் எங்கிலும் இருக்கும். Celcom நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு பாடலாகவும் அமைகிறது. இந்த வேளையில், என் பாடலுக்கு குறுஞ்செய்தி வழி வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

பாடலின் வரிகள்:

தித்திக்கும் தீபாவளி

பல்லவி

தீபாவளி.. தீபாவளி..
ஊரெங்கும் கொண்டாடும் தீபாவளி...!
தீபாவளி.. தீபாவளி..
உலகெங்கும் தித்திக்கும் தீபாவளி..!
ஐப்பசி மாசம்.. வரும் சந்தோஷம்..
ஆனந்த தீபம்.. தரும் உல்லாசம்..
வீட்டில் தீபங்கள் ஏற்றுங்களே..
இருளே இல்லாமல் மாற்றுங்களே..
மனதில் வெளிச்சத்தை காட்டுங்களே..
தீய எண்ணத்தை ஓட்டுங்களே..


சரணம் 1

காலை.. கண் விழிப்போமே..
நல்லெண்ணை தலையெல்லாம் தேய்த்திடுவோமே..
நாளும்.. நன்மை செய்வோமே..
நல்லெண்ணம் நெஞ்செல்லாம் சேர்த்திடுவோமே..

ஊரோடு ஒன்றாகவே.. எண்ணங்கள் நன்றாகவே..
தர்மம் தந்த.. தீபத்தின் திருநாளிலே..! ஹே..ஹே.. (தீபாவளி..)

சரணம் 2
வா வா.. தீபங்களோடு..
வானத்தில் மத்தாப்பின் வேடிக்கையோடு..
வா.. வா.. கீதங்களோடு..
மனிதத்தை கொண்டாடும் ராகங்களோடு..!

சோகங்கள் போகட்டுமே.. சொந்தங்கள் வாழட்டுமே..
தர்மம் தந்த.. தீபத்தின் திருநாளிலே..! ஹே..ஹே.. (தீபாவளி..)


K.கிருஷ்ணமூர்த்தி

பி.குறிப்பு: 16/10/09 அன்று இரவு மணி 9-க்கு வானவில்லில் இடம்பெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இப்பாடலும், எங்களின் நேர்காணலும் இடம்பெறும். பாடலை கேட்க விரும்புபவர்கள் www.deeparaaga.com அகப்பக்கத்தில் தித்திக்கும் தீபாவளி என்ற பாடலை தேர்வு செய்து கேட்கலாம். இறுதிச் சுற்றுப் போட்டிக்கு வந்த அனைத்து பாடல்களுமே மிகத் தரமான பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

Tuesday, August 25, 2009

சிறிய இடைவெளி

அன்பு வாசகர்களே..

கடந்த 7.08.2009-இல் எனது ஆருயிர் மாமா, எனது உயிரினும் மேலான சகோதரியின் கணவர், திரு வெங்கடேசன் அவர்கள் சிவபதம் அடைந்ததால்.. எனது இந்த வலைப்பதிவில் தொடர்ந்து இடுகைகள் இடம்பெறாமல் போனது. இன்னமும் மீளாத் துயரத்திலும் அதிர்ச்சியிலும் இருக்கும் நான் சில நாட்கள் கழித்து மீண்டும் எனது 'அத்வைத தாம்பத்யத்தையும்' பிற கவிதைகளையும் தொடர்வேன். நண்பர்கள், வாசகர்கள் அணைவரும் சற்று பொறுமை காப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மற்ற அலுவலகளை கவனிக்கிறேன்.

கவித்தமிழின் பயணம் விரைவில் தொடரும்..

இக்கண்
K.கிருஷ்ணமூர்த்தி

Friday, July 24, 2009

அத்வைத தாம்பத்யம் (4)

பக்தி யோகம்
பகுதி 4

அது ஒரு குளிர்காலம்..

வெள்ளைத் தாமரை
விண்ணில் மலர்ந்தது போல்..
வெள்ளி நிலவு..

அந்த
வெண்ணிலவின் பிம்பம்
பட்டுத் தெரிப்பதுபோல்..
மண்ணுலகில்
மானுட நிலவுகள்..
மங்கையர் வடிவினில்..

ஒரு
அலுவல் காரணமாய்
கேத்தரினுக்காய் காத்திருந்தோம்
நானும் நண்பன் ரமேஷும்..
ஏழாம் விடுதியில்..

அன்று வரை
கேத்தரின் மட்டும்தான்
எனது பெண்தோழி..

சொன்ன நேரத்தில்
கேத்தரினும் வந்தாள்..
அலுவல்
ஐந்து நிமிடங்களில்
முடிந்தாலும்
அரை மணி நேர அரட்டை..

அப்பொழுதுதான்..
அந்த அதிசயம் நிகழ்ந்தது!

வானத்தில்
ஆயிரம் நட்சத்திரங்கள்
மின்னினாலும்
நிலவு மட்டும் ஒன்றுதான்..

அந்த ஒரு நிலா
தன்னந்தனிமையில்
பூமியில்
உலா வந்தால்..??

நிலவுக்கு
முகம் மட்டுமே உண்டு..
இந்த நிலவுக்கு
முகமும் உண்டு..!

என் அதிர்ஷ்டம்..
அந்த நிலா
கேத்தரினுக்கு
பரிட்சயமான நிலா..!

“யாரது..?”

இன்னமும் நான் கேட்கவில்லை..

“அதுதான் சீதா..”
கேத்தரினின் மழலை..

இராமாயணத்தில்
கவிச்சக்ரவர்த்தி கம்பனின்
கற்பனையை
அன்று
நான் கண்ணெதிரே கண்டேன்..!

கேள்வி நாயகி கேத்தரினால்
எங்களின்
அறிமுகப் படலம்
ஆரம்பமானது..

அருகில் வந்த நிலா
பேசியது!

“ஹாய்..
ஐ எம் சீதாலட்சுமி..”

நண்பனை சாதரணமாக
பார்த்த அந்த நிலவு..
என்னைப் பார்த்ததும்
முகம் சுளித்தது..!

காரணம்..
வேறென்ன..? நான்தான்..
நிலாக்களை நகைப்பதுதானே
என்
பொழுது போக்கு..!

என் அருமை பெருமை எல்லாம்
அறிந்த நிலவு அது போலும்..!

“இவங்ககிட்ட பேசினிங்க..
உங்க வண்டவாளம் எல்லாம்
தண்டவாளத்தில் ஏறிடும்..!”

கேத்தரின் சீதாபுராணம் பாடினாள்..

சீதா ஜாதகம் பார்ப்பாளோ..?
ரமேஷ்
கையை நீட்டினான்..

“எனக்கு எப்படி இருக்கு பாருங்க..”

நிலா முகத்தில் ஒரு சலனம்..!

“கையெல்லாம் பார்க்க தெரியாது..
இராத்திரி ஆயிடுச்சி..”
இழுத்தாள்..

கரடி நான்தான்
என்று
எனக்கே தோன்றியது..!

ஏமாற்றம்
எங்கள் இருவருக்கும்..

தடுமாற்றம்
நிலவுக்கு..

கண்ணெதிரே
நிலவு வந்தும்..
அன்று
எனக்கு மட்டும் அமாவாசை..!!

===> அறிமுகப் படலம் தொடரும்..

Sunday, July 19, 2009

டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன்


(டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் மண்ணுலகை விட்டு மறைந்த அன்று, அவருக்காக நான் எழுதிய கவிதை பின் ரகுவின் 'மோகனம்' என்ற குருந்தட்டில் பாடலானது. அந்த பாடல் வரிகளை கவித்தமிழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..)

இமயம்

இமயம் ஒன்று வீழ்ந்து போனதே..
இயற்கை அன்று ஓய்ந்து போனதே..
விழிகளில் ஈரம்.. இதயத்தில் சோகம்..

சிகரம் ஒன்று சாய்ந்து போனதே..
சிங்கம் ஒன்று சோர்ந்து போனதே..
சிதையினில் வீரம்.. சிதைந்திடும் நேரம்..

உறங்கிடு வீர சிங்கமே.. இரு விழி மூடி..
ஓய்வெடு நீ செவாலியே.. அமைதியை நாடி..
இது நனவா.. வெறும் கனவா..
உணர்த்திட யாரும் இல்லையே..
இது குளமா.. நைல் நதியா..
விழிகளில் மீதமில்லையே..

கலைமகனே.. கதறுகிறோம்..
உயிர்களின் ஓலம் இன்னும் ஓயவில்லையே..
தலைமகனே.. தமிழ்மகனே
விடைபெறும் நேரம் நெஞ்சம் தாங்கவில்லையே..

கலைமகளே கதறுகிறாள்..
உனையன்றி சேவை செய்ய யாரும் இல்லையே
கலை உலகின்.. சுடரொளியே..
உனையன்றி பாதை சொல்ல நாதியில்லையே..

மறைந்திடுமா உனது புகழ்..
தமிழ் உள்ள காலம் மட்டும் காதில் கேட்குமே..
ஓய்ந்திடுமா.. உனது அலை
கலை உள்ள காலம் மட்டும் காற்றில் வாழுமே...




பாடலை முழுதும் கேட்க இங்கே சொடுக்குங்கள்..
Imayam - Jerry Retnam


பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசை : ஜெர்ரி இரத்னம்
குரல் : ரகு


(பி.கு: ஜெர்ரி இரத்னமும் நானும் இணைந்த இரண்டாவது இசைக் குறுந்தட்டுதான் ரகுவின் மோகனம். இதற்கு முன் சலனம் என்னும் இசைத்தட்டில் தான் முதன் முதலாக நான் பாடல் இயற்றினேன்.. அந்த இசைத்தட்டு, மலேசிய இசைத்துறையில் ஒரு இசைச் சலனத்தை ஏற்படுத்தியதும் மறக்க முடியாத அனுபவம்.. ஜெர்ரி இரத்னம் மலேசிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் TV3 நடத்திய Muzik Muzik நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே தொலைக்காட்சி நிறுவனத்தில் இசையமைப்பாளராகவும், ஒலி காப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.)

Friday, July 10, 2009

அத்வைத தாம்பத்யம் (3)

பக்தி யோகம்
பகுதி 3


கேத்தரின்..

என் காதல் அத்தியாயத்தின்
ஆணிவேர்!

பெண்களைக் கண்டு
பொழுதுபோக்கியவனை
பழுது பார்த்தவள்..

என்னைத் தன்னிடம்
பேச வைத்தவள்..
என்னோடு பேசியவள்..

எனக்கு என்னை
அடையாளம் காட்டியவள்..
ஆம்..
என்னவளை எனக்கு
அடையாளம் காட்டியவள்..!

கேத்தரின்..

வெள்ளை மனம்
பிள்ளை குணம்..
நிமிடத்திற்கு மூன்று
கேள்விகள் கேட்கும்
தொல்லை-ரணம்..!

எப்படி
தமிழையும் இனிமையையும்
பிரிக்க முடியாதோ..
அப்படித்தான்..
கேத்தரினும் கேள்வியும்..!

மும்பை எக்ஸ்பிரஸ்
படத்தில்
தூங்கிவிட்டு..
கிளைமாக்ஸில்..
"என்ன ஆச்சு..?"
"இவன் எப்படி இங்க?"
"ஐயோ.. இது யாருலா..?"
இது..
தொல்லையில்லாமல்
வேறென்ன..?

இருந்தாலும்..
வெள்ளை மனம்
பிள்ளை குணம்..
கேத்தரின்..

எனது
முதல் பைக்கை..
இரவல் வாங்கி..
பழுதாக்கி..
பாதையிலே விட்டு வந்ததும்..

சுப்பு லட்சுமி சொல் கேட்டு
என்
பெரு விரல் நகத்தை
படார் என்று உடைத்ததும்..

பரிமளாவின் காரில்
பக்கத்து பல்கலைக்கழகம் சென்றதும்..
பின்னால் மட்டுமன்றி..
புகை
நான்கு புறத்திலும் வர..
ரேடியேட்டரைப் பார்க்கச் சொன்னால்
ரேடியோவைப் பார்த்ததும்..!

இறுதியில்..
'hand brake'-ஐ
எடுக்காமல் ஓட்டியதால்
எழுந்த புகை அது என்று
என்னிடம் மட்டும் சொன்னதும்..!

அப்பப்பப்பா..!
எல்லா கலைகளும்
அறிந்தவள் கேத்தரின்..!

என் காதல் அத்தியாயத்தின்
ஆணிவேர்!

எனக்கு 'என்னை'
அடையாளம் காட்டியவள்..


===> அடையாளம் காட்டிய கதை அடுத்த பகுதியில்..

Wednesday, July 8, 2009

அத்வைத தாம்பத்யம் (2)

பக்தி யோகம்
பகுதி 2

பெண்களுடன்
பேசுவதில்லை..
பெண்களை
பேசாமலும் இருந்ததில்லை..!

புத்தனுக்கு
ஒரு
போதிமரம்..

எனக்கு
புத்தகசாலையின்
வாசலில் இருந்த
படிக்கட்டுகள்..!

எனக்கு
பின்னாளில்
கவிதை வந்ததும் அங்குதான்
காதல் வந்ததும் அங்குதான்..!!

படிக்கட்டுகளில் அமர்ந்து
பெண்களின்
உடற்கட்டுகளை
அளவெடுத்ததும் அங்கேதான்..

நட்புப் படிகளில்
ஏறி..
வாழ்க்கையின்
பாடத்தைக் கற்றதும்
அங்கேதான்..!!!

நண்பர்கள்
எனக்கு இட்ட பெயர்
'குருஜீ'

எத்தனையோ கேலிகள்..
எத்தனையோ கிண்டல்கள்..

இருந்தாலும்
பெண்களிடம் மட்டும்
பேசுவதில்லை..!

உடன் படித்த
சுப்பு லட்சுமி..
ஆங்கிலத்தில் ஏதோ கேட்க
மருபடியும்
மௌன சாமியாராய்
நான்..!

பேசாததால்
பெண்களிடம் கிடைத்த
பட்டம்..
'கெட்டவன்'..!

ஏண்டா..
பேசித் தொலையேன்..!

நண்பர்கள் திட்டல்..!

"அட போடா..
பெண்கள் நிலா மாதிரி..
தூரத்தில் மட்டும்தான் அழகு!
அருகே சென்றால்
அத்தனையும் அவஸ்தை!"

இது
அவர்களுக்கு நான் சொன்ன
பதிலா..
இல்லை..
எனக்கு நானே சொல்லிக்கொண்ட
பதில்..!
பொய்யான பதில்..!!!

===> மௌனம் தொடரும்..

Monday, July 6, 2009

அத்வைத தாம்பத்யம் (1)

(இது முற்றிலும் உண்மைச் சம்பவங்களைக் கொண்ட வரலாற்றுப் பூர்வமான எனது காதல் கதை. இது யாரையும் புண்படுத்தவோ, கேலி செய்யவோ எழுதப்பட்டது அல்ல.)

பக்தி யோகம்..
பகுதி 1


அவள்
அவன்
அவள்..!

அவன்
அவள்
அவன்..!

அத்வைத தாம்பத்யம்!

அவள் நானாகி
நான் அவளாகி
ஓருயிராய்
ஒருமித்து இருக்கிறோம்..

இறையோடு கலந்து
இறையாகினால்
அத்வைதம்..

என்னோடு கலந்து
நானாகிளாள்..
அத்வைத தாம்பத்யம்!

*

அது ஒரு கனாக்காலம்..
இளமை இரத்தத்தைப்
பரிசோதித்துப் பார்த்த
விழாக்காலம்..!

மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
1995
மூன்றாம் ஆண்டில்
நான்..
முதல் ஆண்டில்
அவள்..

பெண்களிடம் பேசாதவன்
நான்..
ஆங்கிலத்தில் அவ்வளவாக
பரீட்சயம் இல்லாததால்..
பெண்களிடம் பேசாதவன்
நான்..!

அதென்ன,
பல்கலைக்கழக பெண்கள்
தாய்மொழிக்கு
தடை விதித்து விட்டனரா?!

வரட்டுக் கோபம்...

என்ன கஷ்டம்..?
பேசப் பேசப் பழகிவிடும்..
எனது அருமை சீனியர்..
திரு!

அது சரி..
தவறாக பேசிவிட்டால்?!

ஆண்களாவது பரவாயில்லை,
பெண்களிடம் இரகசியம் தங்காதே!

எதற்கு வம்பு!
பெண்களிடம்
பேசுவதில்லை..
விட்டது தொல்லை...!

===> தொடரும்..

Saturday, June 27, 2009

இதயமே..


இதயமே..

நிமிடத்திற்கு
எழுபத்திரண்டு முறை
துடிக்கிறாயே..

நீயும்
கர்ம யோகிதான்..!

உனக்கு
தீங்கு செய்தாலும்
நன்மை செய்தாலும்..
உன்னால் இயன்றவரை
இயங்குகிறாய்..

இதயமே..!

நீ மட்டும்தான்..
வாலிபம்
குறைய குறைய
உழைப்பை
உயர்த்துகிறாய்..!

உழைப்பை உயர்த்தி
எங்கள்
நாட்களை குறைக்கிறாய்..!

நீ
துடிப்பதால்
உயிர் வாழ்கிறதா?

உயிர்
இருப்பதால்
நீ துடிக்கிறாயா?

புரியாத புதிர்...

எது எப்படியோ..

என் இதயம்
துடிப்பது மட்டும்
எப்பொழுதும்
என்னவளின்
நினைவுகளாலேயே..!

என்
இருதயத்தின்
இரத்த நாளங்களில்..
அழுத்தம்
குறைவதும் அவளாலே..

அதுவே
அவ்வப்போது
அதிகரிப்பதும் அவளாலே..!!

ஓன்று மட்டும்
உறுதி..

என் இதயம்
விட்டு விட்டு
துடிக்கலாம்..

ஒருபோதும்
அவளை
விட்டுவிட்டுத்
துடித்ததில்லை..!!

• K.கிருஷ்ணமூர்த்தி

Monday, June 15, 2009

அடியே பெண்ணே..


அடியே பெண்ணே..

என் ஆவி என்னவோ
உனை எண்ணியே வேகிறது..

என் தேவி என்னிடம்
வர வேண்டியே சாகிறது..

என் பாதி உயிர் இன்று,
நீ வரும் திசையில்
வேர்க்கின்றது...

என் மீதி உயிர் மட்டும்,
உன் ஞாபக தென்றலில்
பூக்கின்றது..

என்று வருவாயோ பெண்ணே... ?
உயிரை என்று
திருப்பித் தருவாயோ கண்ணே..?!

மௌனம் கலைந்தேன்,
வார்த்தை இங்கில்லை?
மனதை திறந்தேன்..
தேவி நீ இல்லை..
சிறகை விரித்தேன்,
வானம் இங்கில்லை..
விறகாய் ஆனேன்..
நெருப்பும் இங்கில்லை..!!

என்று வருவாயோ பெண்ணே...?
என்னை என்று..
திருப்பித் தருவாயோ கண்ணே..?!

பார்வை கொண்டேன்,
காட்சி நீ இல்லை
பாதை கொண்டேன்,
பாவை நீ இல்லை..
தாகம் கொண்டேன்,
பருக நீ இல்லை..
மேகமானேன்..
துளிகள் என்னில் இல்லை..

என்று வருவாயோ பெண்ணே...?
எனக்கு என்ன
தருவாயோ கண்ணே...?!

K.கிருஷ்ணமூர்த்தி

Tuesday, June 9, 2009

வாடிய பயிரை..


அனுபல்லவி
வாடிய பயிரை கண்டபோதெல்லாம்..
வாடினார் வள்ளல் பெருமான்..
ஆடிய உயிரை கொன்ற போதெல்லாம்
கலங்கினார் கருணைக் கடலே..

பல்லவி
உயிர்களை படைப்பது கடவுளடா..
அதை உயிராய் மதிப்பது மனிதமடா.. மனிதமடா.. 2x
இறப்பு என்பது இயற்கையடா.. அதை
உன் கையில் எடுப்பது கொடுமையடா.. (வாடிய..

சரணம்
எளியதை கொன்று வலியது வாழும்..
காட்டில் வாழும் மிருகமடா..
உயிர்களை மதித்து பயிர்களை சமைத்து
உண்டு வாழ்ந்தால் மனிதனடா.. (இறப்பு..

கருணை என்பது கடவுளின் வடிவம்
கருணையை மறந்தால் மிருகமடா..
கருணையை சுமந்து கடவுளை நினைந்து
உருகி வாழ்ந்தால் தெய்வமடா.. (வாடிய..
(உயிர்களை

  • K.கிருஷ்ணமூர்த்தி


பாடல் ஒலி வடிவில்..

Vadiya Payirai.mp3 -

Tuesday, May 12, 2009

சின்ன சின்ன ஆசை..!


சின்ன சின்ன ஆசைகள்..
செதுக்கி வைத்த ஆசைகள்..
சின்னப் பெண் இவளுக்காய்
சேகரித்த ஆசைகள்..

எண்ண அலைகளிலே
ஏற்றிவைத்த ஆசைகள்..
நெஞ்சின் சிறைகளிலே
உறைந்திருந்த ஆசைகள்..

*

திங்களின் ஒளியினிலே
தனித்திருக்க ஆசை..
தென்றலின் தாலாட்டைத்
தமிழ் படுத்த ஆசை..

மேகங்கள் மழையாகும்
விதம் பார்க்க ஆசை..
சோகங்கள் அதைப்போல
கரைந்தோட ஆசை..

முள்ளில்லா ரோஜாக்கள்
நட்டுவிட ஆசை..
மல்லிகையை முள்ளாக்கி
தொட்டுவிட ஆசை..!

வண்னத்துப் பூச்சிகளின்
மொழி கேட்க ஆசை..
எண்ணத்தில் அதை நிறுத்தி
எழுதி வைக்க ஆசை.. !

குருவிகளின் பாஷைதனை
கற்றுக் கொள்ள ஆசை..
சுறுசுறுப்பை எறும்பிடத்தே
பற்றிக் கொள்ள ஆசை..

அருவிகளின் சலசலப்பில்
அயர்ந்திருக்க ஆசை..
இரவுகளின் கதகதப்பில்
விழித்திருக்க ஆசை..!

நிலவுதனில் கண்ணுறங்கும்
நித்திரையில் ஆசை..
கனவுகளில் கவியெழுதும்
காதலிலும் ஆசை... !

பனிமலரும் வேளைகளில்
பாட்டெழுத ஆசை..
பருவமகள் ஆசைகளை
கேட்டெழுத ஆசை..!



  • K.கிருஷ்ணமூர்த்தி

Wednesday, May 6, 2009

அம்மா..













மண்மீது வந்த தெய்வமே..
கண்போல காத்த சொந்தமே..
அன்பாலே ஆன பந்தமே..
எங்கள் அன்புத் தாயே..

உன்போல உறவு வேறில்லை..
நீ தந்த பாசம் பொய்யில்லை..
உனை மிஞ்சும் ஜீவன் ஒன்றில்லை..
என்றும் தெய்வம் நீயே..

முன்னூரு நாட்கள் உன்னில்..
உருவான உயிரின் பந்தம்..
ஏழேழு ஜென்மம் ஆனாலும்..
பொய்க்காது உந்தன் சொந்தம்..


பாலோடு பாசத்தை பருகத் தந்தாய்..
தாலாட்டில் தமிழைப் பழகித் தந்தாய்..
முத்தத்தில் உயிரினை உருக வைத்தாய்..
மொத்தத்தில் மனிதத்தை மலர வைத்தாய்..!


அம்மா..
உன் அணைப்பின் கதகதப்பில்
சொர்கத்தை உணர வைத்தாய்!!!

  • K.கிருஷ்ணமூர்த்தி


Monday, May 4, 2009

சரவண பவ..



பல்லவி
சரவண பவ என்னும் திருமந்திரம்..
அதை நாளும் சொல்ல எங்கள் துயர் தீர்ந்திடும்..
அறுபடை மலை வாழும் அருட்குமரா..
உன்னை எண்ண எண்ண நெஞ்சில் இருள் நீங்கிடும்.. X 2

(சரவண பவ..)

சரணம்
கர்வம் என்ற பாம்பினை..
அடக்கியாளும் மயில் துணை..
பாதையில் தொல்லை நீங்கவே..
வெற்றி தரும் வேல் துணை..

சூரனை வதமும் செய்திட..
சிவனின் நெற்றிக் கண்ணிலே
உதித்து வந்த கார்த்திகேயா..
ஈசனின் இளைய மைந்தனே..

இச்சை வடிவான வள்ளி..
ஒருபுறம் கை சேர..
கிரியை எனும் தெய்வானை..
மறுபுறம் தோள் சேர..

இருப்பதெல்லாம் உன் பொருளே..
நடப்பதெல்லாம் உன் செயலே..
கேட்பதெல்லாம் உன் புகழே..
காண்பது எல்லாம்.. உன் அழகே..
முருகா.. முருகா.. முருகா.. முருகா.. –-2x (சரவண பவ..

(இருப்பதெல்லாம்..

பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசைவட்டு : புளிசாதம்




பாடலை ஒலி வடிவில் கேட்க கீழே சொடுக்குங்கள்..


Saravanabava.mp3 -

Tuesday, April 28, 2009

நட்பு..!



உலக

வரைபடத்தில்

மலேசியா..

ஒரு,

சிறு புள்ளி

என்றிருந்தேன்..

இன்று..

உன் பிரிவில்தான்

அதன்

பரப்பளவு

புரிகிறது

எனக்கு..?!

  • K.கிருஷ்ணமூர்த்தி

(பல்கலைக்கழக நாட்களில் பழகிய நண்பர்களை மீண்டும் நினைவு கூர்கிறேன்.. ஓரிருவரைத் தவிர.. அநேகரைப் பற்றிய தகவலே இல்லை..!)

Friday, April 24, 2009

காட்டில்..!







இறந்த மூங்கிலும்
இரவல் மூச்சால்
மோகனம் இசைக்கிறது..

எல்லாம் இருந்தும்
மனிதன் ஏனோ
இரவல் கேட்கின்றான்..!







உதிர்ந்தாலும்
மயிலின்
மயிர் கூட
அழகு..

மனிதன் உதிர்ந்தால்..!







தேவைக்குமேல்
தேடுவதில்லை
மிருகம்..

தேவைகள்
தீர்ந்த பாடில்லை..
மனிதம்..!






காடுகளில்
மதச் சண்டை
இல்லை..

அது
இல்லாத நாடுகளே
இங்கு இல்லை..!


  • கிருஷ்ணமூர்த்தி

Wednesday, April 22, 2009

யுத்த பிக்குகள்!

ஏ புத்தனே..

உன்
சமாதானக் கொள்கைக்கு
இலங்கையில்
கொள்ளி வைத்துக்
கொண்டிருக்கிறார்களே..!

ஈழமே இன்று
இடுகாடாய்..
எங்கள் இனத்தவர்
அங்கே..
பலிகாடாய்..!

எங்கே உன்
சமாதானம்..?
எங்கே போனது
உன்
சாத்துவீகம்..?

*
பாலஸ்தீனத்தில்
ஐந்து பேர்
இறந்தால்
வையகமே அழுகிறது..

ஈராக்கில்
ஒரே ஒரு
குண்டு விழுந்தால்
அகிலமே அதிர்கிறது..!

இலங்கையில் மட்டும்
தவிப்பது
தமிழன் என்பதால்..
இறப்பது
என் இனம் என்பதால்..
தமிழக அரசு கூட,
மௌனமாய்..
மழுப்புகிறது..!

*
புத்தம் பேசும்
புண்ணிய பூமி
யுத்தக் காடாய்
எறிகிறது..

புத்த பிக்குகள்
யுத்த பிக்குகளாய்
எள்ளி நகைப்பது
சுடுகிறது..!

ஆயிரம் காரணம்
கூறிய போதிலும்
புத்தத்தில் கொலைக்கு
இடமுண்டோ..?

எங்கும்
அப்பாவி மக்களின்
அழுகுரல் ஓலங்கள்..
புத்தத்தில் எங்கேதான்
அன்புண்டோ..!

*

ஏ புத்தனே..

இன்னும்
எத்தனை நாட்கள்
எங்களை
ஏமாற்றப் போகிறாய்..?

உன்,
புத்தம் சரணம் கச்சாமி..!
இன்று
யுத்தம் மரணம் கச்சாமி
ஆனது..

உன்,

தர்மம் சரணம் கச்சாமி..!
இன்று..
இரத்தம் இரணகளம் கச்சாமி
ஆனது..!!

இன்னும்
எத்தனை உயிர்கள்
இறந்திட வேண்டும் ..?

இன்னும்
எத்தனைக் காலம்
அழுகுரல் வேண்டும்..?

இந்த
யுத்த பிக்குகள்
கொலைவெறி தீர..
சொல்வாயா சித்தார்த்தா..?!!!

  • K.கிருஷ்ணமூர்த்தி

Friday, April 17, 2009

வரமா சாபமா..?

குழந்தைச் செல்வம்..

சிலர்
குழந்தைக்காகவே
கூடுகின்றனர்..

சிலர்,
கூடிவிட்டு
குழந்தை என்றால்
ஓடுகின்றனர்..!

பணக்காரர்கள்
வாரிசு வேண்டி..
ஒன்றிரண்டோடு
ஒடுங்கிவிடுகின்றனர்..

சில தினக்கூலிகள்..
வாரிசுகளை
ஆண்டுக்கொன்றாய்
விதைக்கின்றனர்..!

*
இயலாதவர்கள்..
பிள்ளைகள் தலையில்
பழுவை ஏற்றுகின்றனர்..

இயன்றவர்கள்..
பிள்ளைகளையே
பழுவாக்கி விடுகின்றனர்..!

*
முதல்
எட்டு வருடம்
என்ன செய்தாலும்
கொஞ்சல்..!

அடுத்த
எட்டு வருடம்
படிக்கச் சொல்லி
கெஞ்சலோ கெஞ்சல்..!!

பதினாறுக்கு மேல்..
பிள்ளைகளைப் பார்த்து
பெற்றோர் அஞ்சல்..!!!

திருமணம்
முடிந்துவிட்டால்..
பெற்றவர்கள்
அங்கும் இங்கும்
ஆடும் ஊஞ்சல்....!

*
முகச்சாயம்
நகச்சாயம்
எல்லாம் மறந்து..
பிள்ளையின்
முகச்சாயலில்
குளிர் காயும்
தாயுள்ளம்..

விடுமுறை
ஓய்வு
எல்லாம் மறந்து
பிள்ளையின்
எதிர்காலத்தை
ஆசையோடு
அசை போடும்
தந்தையுள்ளம்..

ஆனால்..

எதையுமே
எண்ணாமல்
எதார்த்தமாய் வளரும்
பிள்ளை உள்ளம்...!

ஈ கொசு
அண்டாமல்
இரவு பகல்
பாராமல்
தாலாட்டி வளர்க்கும்
தாயுள்ளம்...

கடனோ உடனோ
வாங்கினாலும்..
சேமநிதி
சேர்த்த நிதி
தீர்ந்து போனாலும்..
பாடுபட்டு
படிக்க வைக்கும்
தந்தையுள்ளம்..

ஆனால்..

படிப்பென்றாலே
கடுப்பாகி
பெற்றோரை வையும்
எத்தனையோ
பிள்ளை உள்ளம்...!!

*
பிள்ளைகள்
பரீட்சைக்குப் போனால்
பெற்ற மனதில்
படபடப்பு..!

பிள்ளைகள்..
சிகிச்சைக்கு போனால்
பெற்ற மனதில்
துடிதுடிப்பு...!!

பிள்ளைகள்
வெற்றி பெற்றால்
பெற்ற மனதில்
குதூகலிப்பு..!

அதே பிள்ளை
தோல்வியுற்றால்..
பெற்ற மனதில்
பரிதவிப்பு...!!!

பிறக்கும் போதே
பிள்ளைகள் மேல்
அளவிலாத எதிர்பார்ப்பு..!

எதிர்பார்ப்புகள்
இடிந்து போனால்..
ஏமாற்றத்தில்
மௌனத் தவிப்பு...!

*
குழந்தையின் அழுகுரல்

அபயக் குரலா..?
அபாயக் குரலா..??

அது
மோகனமா..
இல்லை
முகாரியா..??

குழந்தைச் செல்வம்..

அது
நிறையா குறையா..?

இல்லை
சுகமா சுமையா..??

குழந்தைச் செலவம்..

அது
வரமா சாபமா..?!!

• K.கிருஷ்ணமூர்த்தி

Thursday, April 16, 2009

எல்லாம் உனக்குள்ளே..


ஓடுது ஓடுது ஓடுது-உலகம்

தேடுது தேடுது தேடுது 2 X

உள்ளுக்குள்ளே உண்மை இருந்தும்

வெளியில வெளியில தேடுது..

அதை வெளியில வெளியில தேடுது.. -(ஓடுது



குழப்பத்துக்குள்ளே தெளிவு இருக்கு

பொறுத்துப் பார்த்தா தெளியுது.. அட

கேள்விக்குள்ளே பதிலும் இருக்கு

போட்டுப் பார்த்தா புரியுது-கணக்கு

போட்டுப் பார்த்தா புரியுது.. -(ஓடுது



இருட்டுக்குள்ளே வெளிச்சம் இருக்கு

கனவிலும் காட்சி தெரியுது - அட

கனவிலும் காட்சி தெரியுது -உன்

திறமைக்குள்ளே வாழ்க்கை இருக்கு

புரிந்தால் வெற்றி கிடைக்குது.. அதை

புரிந்தால் வெற்றி கிடைக்குது.. -(ஓடுது


  • K.கிருஷ்ணமூர்த்தி





Sunday, April 12, 2009

தமிழழகி..!


நிலவு தோற்றதடி பெண்ணே..
கறையிலாமல் கவர்ந்திழுக்கும் -உன்
கறுப்பு கன்னங்களுக்கு முன்னே
நிலவு தோற்றதடி பெண்ணே..!

மலரும் தோற்றதடி பெண்ணே..
இளமையை சோதிக்கும் -உன்
ஈர இதழ்களுக்கு முன்னே..
மலரும் தோற்றதடி பெண்ணே..

மின்னல் தோற்றதடி பெண்ணே..
மின்சாரம் இல்லாமலே தாக்கும் -உன்
மகரந்தப் பார்வைக்கு முன்னே..
மின்னல் தோற்றதடி பெண்ணே..!

வீணை தோற்றதடி பெண்ணே..
மீட்டாமலே மயக்கும் -உன்
ஏகாந்த குரலுக்கு முன்னே..
வீணை தோற்றதடி பெண்ணே..!!

மல்லிகை தோற்றதடி பெண்ணே..
மெய்சிலிர்க்க புன்னகைக்கும் -உன்
முத்தான பற்களுக்கு முன்னே..
மல்லிகை தோற்றதடி பெண்ணே..!!!

தூரிகை தோற்றதடி பெண்ணே..
தொடாமலே தீண்டிச் செல்லும் -உன்
தூண்டில் கண்களுக்கு முன்னே..
தூரிகை தோற்றதடி பெண்ணே..

சித்திரம் தோற்றதடி பெண்ணே..
சிந்தையினை சொக்கவைக்கும் -உன்
சிங்கார வளைவுகளின் முன்னே
சித்திரம் தோற்றதடி பெண்ணே..!!!

தங்கம் தோற்றதடி பெண்ணே..
உரசாமலே உருகவைக்கும் -உன்
அந்தரங்க அங்கத்தின் முன்னே..
தங்கம் தோற்றதடி பெண்ணே..

வெண்மை தோற்றதடி பெண்ணே..
கோயில் சிலைபோல் கிறங்கவைக்கும் -உன்
கோகில மேனிக்கு முன்னே..
வெண்மை தோற்றதடி பெண்ணே..!!!

K.கிருஷ்ணமூர்த்தி

Friday, April 10, 2009

பெற்றோரைப் பேண்

பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து

  • பண்பெனும் பாலூட்டினார் அன்னை..

ஊரில் உன்னை அனைவரும் மதிக்க

  • அறிவெனும் சோறூட்டினார் தந்தை..

நாரில் பூவாய் என்றும்நீ மணக்க

  • நாதாக்கள் ஆற்றிய நற்பணியை

நேரில் காணும் நெஞ்சம் துடிக்க

  • நம்கண் உதிர்க்கும் நீர்த்துளியை..!


பெரியவன் ஆனதும் பெற்றோர்க்கு

  • பனிசெய்து கிடந்திடு என்றும்நீ

பொதிஇவன் என்றுஉன் தந்தையை

  • பழித்து விடாதே ஒருபோதும்

கொதித்து எழுவாள் உனதன்னை- உருக்

  • குலைந்து விடுவாய் உடனேநீ..!

சிரித்து அவர்களை உபசரித்தால்

  • செழித்திடும் உனது எதிர்காலம்..


கண்ணீர்க் கடலை கடந்தவர்கள்

  • கவலையறி யாதுனை வளர்த்தவர்கள்..

தண்ணிர் அற்ற நடுக் காட்டினிலே

  • தவிக்க விடாதே அவர்களைநீ..

முன்னூறு நாளுனை சுமந்ததற்கு

  • மூச்சடக்கி உன்னை ஈன்றதற்கு

முன்னேறும் வேளையில் பெற்றோரை

  • மூழ்க விடாதே ஆழ்கடலில்..!!!

-K.கிருஷ்ணமூர்த்தி

Wednesday, April 8, 2009

நீ வாழ்க..!



எனது
நாள்காட்டியில்
இன்று,
சுப முகூர்த்தம்..!

இன்று,
ஒரு தென்றலின்
பிறந்த தின விழா..

இரக்கமற்றவர்கள்
வாழ்த்தாவிட்டாலும்
இயற்கை
நிச்சயம் வாழ்த்தும்!

இன்று,
உனக்காகவே..
கோழி கூவாமலே
விடியல் விடிந்ததே..
பார்த்தாயா..?

எதிர்பார்ப்புக்களின்
ஏமாற்றத்தால்
வற்றிவிட்ட விழிகளின்
உயிரில்லாத
உறக்கத்தை
கலைக்க மனமில்லாமல்..

பூபாளம்
மௌனமாக
பாடியதே
கேட்டாயா..?!

ஓ..
தென்றலின்
தாலாட்டில்
தூங்கி விட்டிருப்பாய்..!

காலைக் கதிரவன்
கடுமையாய்
இல்லையே
கவனித்தாயா..?

இன்று மலரும் பூக்கள்
உன்
உதட்டோரப் புன்னகை
காணாமல்..
வாடிவிடக்கூடாதாம்..!

ம்ம்..
என்ன வாட்டம்
என்
கண்ணுக்கு..?

ஒழுக விடாதே!

மறந்து விட்டாயா..?
இன்று
உனக்கு விடுமுறை..

உன்
நியாயமான கோரிக்கை
நிராகரிக்கப்பட்டாலும்..

உன்
எதிர்காலத்தின்
ஏடுகளை
இறக்கமற்றவர்கள்
எரித்துவிட்டாலும்..

உன்
புன்னகைப் பூக்களை
மலரும் முன்பே
மூடர்கள்
மறைத்துவிட்டாலும்..

உன்
கவிதைக் கனவினை
உணர்வற்றவர்கள்
உளி கொண்டு
செதுக்கி விட்டாலும்..

உன்
இலகுவான
இதயத்தில்
இரசாயனக் கலவையை
வார்த்தைகளாய்
வஞ்சகர்கள்
வார்த்துவிட்டாலும்..

உன்
ஓவியக் கண்களை
ஒழுக விடாதே!

உன்
வேல் போன்ற விழிகளை
வேர்க்க விடாதே..!!

இன்று
உனக்கு விடுமுறை..
மறந்து விட்டாயா..?

கவலை வேண்டாம்..

இன்று
உனக்காய்
உன்
விழிகளின்
வேலையை
மாலையில்
வானம் செய்யும்..!!!

K.கிருஷ்ணமூர்த்தி

(வேதனையின் விளிம்பில், ஒழுகும் கண்களோடு வாழ்க்கை நடத்தும் ஒரு துரதிருஷ்ட தோழியின் பிறந்த தின வாழ்த்துப் பா..)

Saturday, April 4, 2009

நான் செய்த பாவம் என்னையா..?

அநுபல்லவி

ஆயிரம் கோடி பிறப்புகள் எடுத்தேன்..
உன் காலடி சேர முடியவில்லை... உன்
ஆலயம் தோறும் காவடி எடுப்பேன்..
எனக்கினி வேறு வழியுமில்லை..
முருகா..

பல்லவி

நான் செய்த பாவம் என்னையா..?
இந்த மானிட பிறப்பை எடுத்துவிட்டேன்.. –2X
யார் செய்த சாபம் சொல்லையா - இன்னும்
வாழ்க்கையின் பிடியினில் தவிக்கின்றேன்..

(நான் செய்த..

சரணம்

ஒவ்வொரு சஷ்டியும் விரதம் இருந்தேன்..
மனதினில் அமைதியில்லை..
ஒவ்வொரு விடியலும் உனை தொழுதேன்..
உன் அருள் கிடைக்கவில்லை.. X 2

(நான் செய்த..

ஔவையின் தமிழை கேட்டு ரசிக்க..
நேரினில் காட்சி தந்தாய்..
சுட்ட பழம் வேண்டுமா.. சுடாப்பழம் வேண்டுமா
சிறுவனாய் பரீட்சை செய்தாய்..
உன் நாமம் தவிர வேறொன்றும் அறியேன்..
தினம் உனை பாடுகின்றேன்- உன்
திருப்புகழை.. நான் பாடி நீ கேட்க..
ஏன் இன்னும் வரவில்லை..

(நான் செய்த..


இசைவட்டு : புளிசாதம்
பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி
இசை : நாதன்

பாடலை ஒலி வடிவில் கேட்க கீழே சொடுக்குங்கள்..

Ayiram kodi.mp3 -

Thursday, April 2, 2009

நாயகனே.. விநாயகனே..

பல்லவி

நாயகனே.. விநாயகனே.. -2x
நலங்கள் சேர்க்கும் நாயகனே.. -2x
தூயவனே.. எனை ஆள்பவனே
துதிக்கை உடைய தூயவனே.. (நாயகனே

சரணம்

ஒரு புறம் புத்தியை ஏந்தி..
மறு புறம் சித்தியை ஏந்தி
பிரணவமாக இருப்பவனே.. ஆ.. –2x
துதிக்கையில் பிரணவத்தை காப்பவனே.. (நாயகனே

பார்வதியால் சாபம் பெற்ற
நந்திதேவன் குறையும் நீங்க.. -2x
அருகினை அவனிடம் ஏற்றவனே
ஜெயம்தரும் அருகம்புல் நாயகனே

வியாசருடன் சபதம் செய்து..
பாரதம் எழுதச் சென்று..
தந்தத்தை தந்த தயாளனே
அபயம் அருளும் ஆண்டவனே.. (நாயகனே

இடுப்பினில் அரவம் கொண்டு..
குண்டலினி சக்தியை தந்து..
அங்குசத்தால் குறைகள் தீர்ப்பவனே..
முதலே.. மூஷிக வாகனனே .. (நாயகனே


இசைத்தட்டு : புளிசாதம்
பாடலாக்கம் : K.கிருஷ்ணமூர்த்தி.
இசை : நாதன்

பாடல் ஒலி வடிவில்..

Nayaganey.mp3 -

Friday, March 27, 2009

இறைவன்

இறைவன் என்றும் ஒன்றானான்.. அவன்
அருளும் போது இரண்டானான்.. X 2

மூன்று காலமும் வாழ்கின்றான்.. அவன்
மூன்று குணங்களும் தானானான்..
அன்பு, அறிவு ஆற்றல்..

இறைவன் என்றும் ஒன்றானான்.. அவன்
அருளும் போது இரண்டானான்..

நான்கு வேதத்தில் வாழ்கின்றான்.. அவன்
நான்கு திசையும் ஆள்கின்றான்..
சீலம் நோன்பு செறிவு அறிவு..

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

படைத்தல் காத்தல்
அழித்தல் துடைத்தல்.. மறைத்தல்
ஐந்து தொழில்கள் செய்கின்றான்..
ஐந்து புலன்கள்.. ஐந்து பூதங்கள்..
என்று எதிலும் ஐந்தானான்..

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

ஆறு வழிகள் அவனடி சேறும்..
ஆறு மதமும் அவன் புகழ் கூறும்..
ஓரறிவாயினும் ஆறறிவாயினும்
அனைத்து உயிர்க்கும் முதலானான்..

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

ஏழு அண்டமும் அவனுள் அடங்கும்..
ஏழு பிறப்பும் அவன் சொல்லி பிறக்கும்..
எட்டு குணங்களும் அவனுள் இருக்கும்.. ஆ.. - X 2
எட்டு சித்தியும் அவனிடம் கிடைக்கும்.. X 2

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

பாடலாக்கம்:
K.கிருஷ்ணமூர்த்தி

(எங்களின் புளிசாதம் எனும் இசைத்தட்டுக்காக, திருமந்திரத்தின் முதல் மந்திரத்தைத் தழுவி இயற்றிய பாடல் இது.)

பாடல் ஒலி வடிவில்..


Iraivan.mp3 -

தேவை இல்லை!

வீடில்லை
கூடில்லை..
வாடகை
தரவும் காசில்லை..

சோறில்லை
நீறில்லை
சோதனைக்கு
ஓர் எல்லையில்லை..

ஊனில்லை
உறக்கமில்லை
என் உயிரே
எனக்கு சொந்தமில்லை...!

ஏடில்லை
எழுத்தில்லை..
ஏட்டுக்கல்வியும்
எனக்கில்லை..

மானமில்லை
ஈனமில்லை
மேனியிலே
நல்ல துணியுமில்லை..

கூனுமில்லை
குருடுமில்லை
ஆனாலும்
குடித்தனம்
எனக்கு தேவையில்லை..!

வேலையில்லை
வெட்டியில்லை
வேதனையை
சொல்லி அழ யாருமில்லை..

அழகில்லை
அறிவுமில்லை..
ஆறுதல் சொல்லவோர்
நாதியில்லை..

கண்ணனில்லை
மன்னனில்லை
உன்
காதலுக்கு
ஏற்றவன் நானில்லை..!!

K.கிருஷ்ணமூர்த்தி

Tuesday, March 24, 2009

தலையணை மந்திரம்


பட்டில் புடவை கட்டி
  • பாவை நான் இங்கிருக்க..

தொட்டில் உறங்க வைச்சு

  • துணை சேர காத்திருக்க..

கட்டில் கதை படிக்க

  • கண் முழிச்சி வேர்த்திருக்க..

தட்டில் பால் பழமும்

  • மாமனுக்கு காத்திருக்க..


"யாரோ தானே மாமியார்

  • எனக்கு என்ன தேவையா..?

மோரோ கூழோ கொடுப்பாங்க

  • மூத்தவரு கிட்ட அனுப்புங்க..
ஊரோ உலகோ பழிச்சாலும்..
  • ஒன்னும் கெட்டுப் போகாது..
காரோ வீடோ வாங்கிப்புட்டா..
  • கடுதாசி போட்டு அழைச்சிக்கலாம்..!"


தலையணை மந்திரம் நான் போட

  • தாயும் மகனும் பிரிஞ்சாங்க..
சிலையென என்னைக் கண்டவுடன்
  • சிந்தனை எல்லாம் இழந்தாக..
சரியென அண்ணன் வீட்டுக்கு
  • சாயங்காலம் போனாக..
விதியென எண்ணி அத்தையுந்தான்,
  • விம்மிக் கொண்டே போனாங்க..!


ஆவி கொதிப்பதை நான்

  • ஆருகிட்ட சொல்லி அழ..?

பாவி மனுசன் அவன்

  • இன்னும் வந்து சேரலையே!

கூவி விடிய வைக்க

  • கோழியுந்தான் வந்திருச்சே..
தேவி எனை மறந்து,
  • தேவருந்தான் போனதெங்கே..??!!

-K. கிருஷ்ணமூர்த்தி

(இது வெறும் கற்பனைக் கதைக் கவிதையே. அன்னையை கூட்டிக்கொண்டு போன கணவன் வீடு திரும்பவே இல்லை. மாமியாரையும் பெற்ற தாய் போல போற்றுவதே நமது பண்பாடு.. .)

Saturday, March 21, 2009

அண்ணன் வேதமூர்த்தி

அண்ணா..

எங்களின் வலியை சுமந்து..
எங்களின் விதியை நினைந்து..
எங்களின் கதியை உணர்ந்து..

உன்
இதயம் வலிக்கிறது..
எங்களின்
இதயம் கணக்கிறது..!

அண்ணா..
நாதியற்ற
சமுதாயத்திற்காய்
குரல் கொடுத்தாய்..

இன்று
நாதியற்று..
அயல்நாட்டில் கிடக்கிறாய்..

நன்றி இருக்கும்
ஒவ்வொரு
தமிழனுக்கும் தெரியும்..

நீ..
பயத்தால் ஓடவில்லை..
பாசத்தால் ஓடினாய்..!

நீ புலி..
பதுங்கினாய்..
பாய்ந்தாய்..
இன்னமும் பாய்வாய்..
எங்களுக்குத் தெரியும்.. !

பாரதத்தில்..
உன்னைக் கண்டு..
உள்ளுக்குள்ளேயே
'ஒன்னுக்கு' போன
தலைவர்களுக்கும்
அது தெரியும்..!

ஊமைத்
தோழர்கள் கூட
உனக்காய்
உரிமைக்குரல் எழுப்புகின்றனர்..

மேடைப் பேச்சு
அரசியல்வாதிகள் மட்டும்..
மலடுகளாய்
மௌனிக்கிறார்கள்..!!

அண்ணா...
உன் இதயம்..
வித்தியாசமாக
வீங்கவில்லை..

எங்களின்
விதியை
எண்ணி எண்ணி
வீங்குகிறது..!!

"சமபந்தி"
கிடைக்காத சமுதாயத்தை
எண்ணி.. எண்ணி..
சமமில்லாமல் வீங்குகிறது..

எங்கள்
இருதயத்தின்
இரத்த நாளங்களில்..

அன்று
அழுத்தம் குறைந்ததும்
உன்னாலே..

அதுவே இப்போது
அதிகரிப்பதும்
உன்
நிலையாலே..!!!
உன்
பெயர் சொன்னால்..
அரசியல்வாதிகளுக்கு
ஆத்திரம் வருகிறது..
ஆண்டவனுக்கோ..
அதிர்ஷ்டம் வருகிறது..!!!

ஆம்..
அர்ச்சனைச் சீட்டுகள்
எல்லாம்..
இங்கே
உனக்காக
தீர்ந்து விடுகின்றனவாம்..!
ஆருயிர் அண்ணா..

என்றும்..
எங்கள் இதயம்
விட்டு விட்டு துடிக்கலாம்..
ஒரு போதும்..
உன்னை
விட்டுவிட்டு துடித்திடாது..!!

***

கண்ணீருடன்..
நம்பிக்கையுடன்
உனக்காய்
பிரார்த்தனை
செய்யும்
தம்பி..
-K.கிருஷ்ணமூர்த்தி


என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs