Friday, March 27, 2009

இறைவன்

இறைவன் என்றும் ஒன்றானான்.. அவன்
அருளும் போது இரண்டானான்.. X 2

மூன்று காலமும் வாழ்கின்றான்.. அவன்
மூன்று குணங்களும் தானானான்..
அன்பு, அறிவு ஆற்றல்..

இறைவன் என்றும் ஒன்றானான்.. அவன்
அருளும் போது இரண்டானான்..

நான்கு வேதத்தில் வாழ்கின்றான்.. அவன்
நான்கு திசையும் ஆள்கின்றான்..
சீலம் நோன்பு செறிவு அறிவு..

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

படைத்தல் காத்தல்
அழித்தல் துடைத்தல்.. மறைத்தல்
ஐந்து தொழில்கள் செய்கின்றான்..
ஐந்து புலன்கள்.. ஐந்து பூதங்கள்..
என்று எதிலும் ஐந்தானான்..

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

ஆறு வழிகள் அவனடி சேறும்..
ஆறு மதமும் அவன் புகழ் கூறும்..
ஓரறிவாயினும் ஆறறிவாயினும்
அனைத்து உயிர்க்கும் முதலானான்..

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

ஏழு அண்டமும் அவனுள் அடங்கும்..
ஏழு பிறப்பும் அவன் சொல்லி பிறக்கும்..
எட்டு குணங்களும் அவனுள் இருக்கும்.. ஆ.. - X 2
எட்டு சித்தியும் அவனிடம் கிடைக்கும்.. X 2

இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன் அருளும் போது இரண்டானான்..

பாடலாக்கம்:
K.கிருஷ்ணமூர்த்தி

(எங்களின் புளிசாதம் எனும் இசைத்தட்டுக்காக, திருமந்திரத்தின் முதல் மந்திரத்தைத் தழுவி இயற்றிய பாடல் இது.)

பாடல் ஒலி வடிவில்..


Iraivan.mp3 -

தேவை இல்லை!

வீடில்லை
கூடில்லை..
வாடகை
தரவும் காசில்லை..

சோறில்லை
நீறில்லை
சோதனைக்கு
ஓர் எல்லையில்லை..

ஊனில்லை
உறக்கமில்லை
என் உயிரே
எனக்கு சொந்தமில்லை...!

ஏடில்லை
எழுத்தில்லை..
ஏட்டுக்கல்வியும்
எனக்கில்லை..

மானமில்லை
ஈனமில்லை
மேனியிலே
நல்ல துணியுமில்லை..

கூனுமில்லை
குருடுமில்லை
ஆனாலும்
குடித்தனம்
எனக்கு தேவையில்லை..!

வேலையில்லை
வெட்டியில்லை
வேதனையை
சொல்லி அழ யாருமில்லை..

அழகில்லை
அறிவுமில்லை..
ஆறுதல் சொல்லவோர்
நாதியில்லை..

கண்ணனில்லை
மன்னனில்லை
உன்
காதலுக்கு
ஏற்றவன் நானில்லை..!!

K.கிருஷ்ணமூர்த்தி

Tuesday, March 24, 2009

தலையணை மந்திரம்


பட்டில் புடவை கட்டி
  • பாவை நான் இங்கிருக்க..

தொட்டில் உறங்க வைச்சு

  • துணை சேர காத்திருக்க..

கட்டில் கதை படிக்க

  • கண் முழிச்சி வேர்த்திருக்க..

தட்டில் பால் பழமும்

  • மாமனுக்கு காத்திருக்க..


"யாரோ தானே மாமியார்

  • எனக்கு என்ன தேவையா..?

மோரோ கூழோ கொடுப்பாங்க

  • மூத்தவரு கிட்ட அனுப்புங்க..
ஊரோ உலகோ பழிச்சாலும்..
  • ஒன்னும் கெட்டுப் போகாது..
காரோ வீடோ வாங்கிப்புட்டா..
  • கடுதாசி போட்டு அழைச்சிக்கலாம்..!"


தலையணை மந்திரம் நான் போட

  • தாயும் மகனும் பிரிஞ்சாங்க..
சிலையென என்னைக் கண்டவுடன்
  • சிந்தனை எல்லாம் இழந்தாக..
சரியென அண்ணன் வீட்டுக்கு
  • சாயங்காலம் போனாக..
விதியென எண்ணி அத்தையுந்தான்,
  • விம்மிக் கொண்டே போனாங்க..!


ஆவி கொதிப்பதை நான்

  • ஆருகிட்ட சொல்லி அழ..?

பாவி மனுசன் அவன்

  • இன்னும் வந்து சேரலையே!

கூவி விடிய வைக்க

  • கோழியுந்தான் வந்திருச்சே..
தேவி எனை மறந்து,
  • தேவருந்தான் போனதெங்கே..??!!

-K. கிருஷ்ணமூர்த்தி

(இது வெறும் கற்பனைக் கதைக் கவிதையே. அன்னையை கூட்டிக்கொண்டு போன கணவன் வீடு திரும்பவே இல்லை. மாமியாரையும் பெற்ற தாய் போல போற்றுவதே நமது பண்பாடு.. .)

Saturday, March 21, 2009

அண்ணன் வேதமூர்த்தி

அண்ணா..

எங்களின் வலியை சுமந்து..
எங்களின் விதியை நினைந்து..
எங்களின் கதியை உணர்ந்து..

உன்
இதயம் வலிக்கிறது..
எங்களின்
இதயம் கணக்கிறது..!

அண்ணா..
நாதியற்ற
சமுதாயத்திற்காய்
குரல் கொடுத்தாய்..

இன்று
நாதியற்று..
அயல்நாட்டில் கிடக்கிறாய்..

நன்றி இருக்கும்
ஒவ்வொரு
தமிழனுக்கும் தெரியும்..

நீ..
பயத்தால் ஓடவில்லை..
பாசத்தால் ஓடினாய்..!

நீ புலி..
பதுங்கினாய்..
பாய்ந்தாய்..
இன்னமும் பாய்வாய்..
எங்களுக்குத் தெரியும்.. !

பாரதத்தில்..
உன்னைக் கண்டு..
உள்ளுக்குள்ளேயே
'ஒன்னுக்கு' போன
தலைவர்களுக்கும்
அது தெரியும்..!

ஊமைத்
தோழர்கள் கூட
உனக்காய்
உரிமைக்குரல் எழுப்புகின்றனர்..

மேடைப் பேச்சு
அரசியல்வாதிகள் மட்டும்..
மலடுகளாய்
மௌனிக்கிறார்கள்..!!

அண்ணா...
உன் இதயம்..
வித்தியாசமாக
வீங்கவில்லை..

எங்களின்
விதியை
எண்ணி எண்ணி
வீங்குகிறது..!!

"சமபந்தி"
கிடைக்காத சமுதாயத்தை
எண்ணி.. எண்ணி..
சமமில்லாமல் வீங்குகிறது..

எங்கள்
இருதயத்தின்
இரத்த நாளங்களில்..

அன்று
அழுத்தம் குறைந்ததும்
உன்னாலே..

அதுவே இப்போது
அதிகரிப்பதும்
உன்
நிலையாலே..!!!
உன்
பெயர் சொன்னால்..
அரசியல்வாதிகளுக்கு
ஆத்திரம் வருகிறது..
ஆண்டவனுக்கோ..
அதிர்ஷ்டம் வருகிறது..!!!

ஆம்..
அர்ச்சனைச் சீட்டுகள்
எல்லாம்..
இங்கே
உனக்காக
தீர்ந்து விடுகின்றனவாம்..!
ஆருயிர் அண்ணா..

என்றும்..
எங்கள் இதயம்
விட்டு விட்டு துடிக்கலாம்..
ஒரு போதும்..
உன்னை
விட்டுவிட்டு துடித்திடாது..!!

***

கண்ணீருடன்..
நம்பிக்கையுடன்
உனக்காய்
பிரார்த்தனை
செய்யும்
தம்பி..
-K.கிருஷ்ணமூர்த்தி


Tuesday, March 17, 2009

அவமானம்

வேசிக்கு
வெகுமானம்
வயது இருக்கும் வரை..
தாசிக்கு
தன்மானம்
தாழ் போடும் வரை..

வேங்கைக்கு
அவமானம்
வேழம் வாழும் வரை..
வேரலுக்கு
அவமானம்
நாதம் தோன்றும் வரை..

விண்ணுக்கு
அவமானம்
நிலவு தோன்றும் வரை..
மண்ணுக்கு
அவமானம்
பயிர்கள் வாடும் வரை..

பெண்ணுக்கு
அவமானம்
பெண்மை மூடும் வரை..
கண்ணுக்கு
அவமானம்
காட்சி தோன்றும் வரை..

மருந்துக்கு
அவமானம்
காயம் ஆறும் வரை..
பருந்துக்கு
அவமானம்
பதுங்கி வாழும் வரை..

நண்பா..
நமக்கு
அவமானம்..
மடிந்து வாழும் வரை..!

அனுதினம் சாவது ஏன்..?
ஒருதினம் சாவது மேல்..!!!

--K. கிருஷ்ணமூர்த்தி

Saturday, March 14, 2009

சீதை..

ஒரு சீதை
தீக்குளிக்கிறாள்..

பேதை
அவளுக்கு
வேறென்ன தெரியும்..?

ஒரு சீதை
தீக்குளிக்கிறாள்..

அவளின்
வழக்குமன்றத்தில்..

நீதி தேவதையின்

செவிகள்..

செதுக்கப்பட்டு விட்டன..!

இங்கே..

நீதிபதிதான்

வாதி..

மனம் கல்லாய்ப்போன

சுயநலவாதி..!


சாட்சிக் கூடத்திலோ..

ஊமை இராமன்..!


பேதை அவள்

வேறென்ன செய்வாள்..??

ஒரு சீதை
தீக்குளிக்கிறாள்..!


- K.கிருஷ்ணமூர்த்தி



Friday, March 13, 2009

சிறைப்பறவை

இந்த,
சம்பிரதாயச் சிறைக்குள்
விரிக்க முடியா
சிறகுகள்..

வானத்தை
தொலைத்துவிட்ட
பறவை
மீண்டும்
பறக்க நினைக்கிறது..

நியாயம்தான்..
பறந்தால்தானே
பறவை..!

இது,
உடைந்துவிட்ட
சிறகல்ல..

விதியின் சதியில்
நனைந்துவிட்ட
சிறகு..

கால வெய்யிலில்
ஓர் நாள்
உலர்ந்தே தீரும்..!
அவள்
அணிந்திருப்பது
சோகப் புன்னகை..

சோகத்தை மறைக்க
அடிக்கடி..
சிரிப்புச் சாயம்
கைகொடுக்கிறது..

என்ன செய்வது?
என்றுமே..
உன் இனமே
உனக்கு எதிரி..!!!

இருந்தாலும்
இந்தச் சிறை
உன்னை,
பலப் படுத்தி இருக்கிறது..
பக்குவப் படுத்தி இருக்கிறது..

**
சிறைக்கதவுகள்
திறக்கும்
ஓசையை மட்டுமே
கேட்டுக் கேட்டு..
அலுத்துவிட்டன செவிகள்..
மரத்துவிட்டது இதயம்..!

சாவியை..
'சாதித்துக்கொண்ட' பிறகு
பந்த பாசச்
சாக்கடையில்
தொலைத்துவிட்டு
தேடும்
ஆண் பறவைகள்..!

அது
தேடும் பணியா?
பாசாங்கா?

**

எதிர்காலம்...

இந்த
கேள்விக்கு
விடை தெரிந்தால்..

அந்த,
சிரிப்புச் சாயம்
சொந்தமாகிவிடும்
என்,
செல்லத்துக்கு..!

-K.கிருஷ்ணமூர்த்தி

(வாழ்க்கையின் தொடக்கத்திலேயே விவாகரத்துப் பெற்று.. வெறுமையின் விளிம்பில் நிற்கும் ஒருத்தியை, அவளின் இரவுகளுக்கு மட்டும் தாலி கட்டத் துடிக்கும் ஆண் (அ)சிங்கங்களின் அவலத்தை நினைத்து வெகுண்டு எழுதிய கவிதை..)

Thursday, March 12, 2009

அடுத்த நூற்றாண்டு

தெருக்களில் அன்று தாய்ப்பால் விற்கும்,

  • தாவரங்களுக்கும் தனி வீடு இருக்கும்..

சுறுசுறுப்பு இரயிலில் வாழ்நாள் விரையும்,

  • சுகாதாரத்திற்காய் சொத்தெலாம் அழியும்..

கறும்புகை முகிலில் அமிலங்கள் பொழியும்,

  • கரியமிலவாயுவில் பிராணமே கரையும்..

திருமணச் சேர்க்கை தெருவினில் நிகழும்,

  • தெய்வங்கள் கூட தோன்றிட தயங்கும்.. !!

அன்று.. தெய்வங்கள் கூட தோன்றிட தயங்கும்..!!!

-K. கிருஷ்ணமூர்த்தி


Wednesday, March 11, 2009

கவிதை

வசந்தமோ சுகந்தமோ..
என்றும்
உனது இராஜாங்கம்..

நிதம்நிதம் இதம்தரும்
இரவில்
உனது வேதாந்தம்..

நினைத்தது அணைக்கவே
மனதில்
கோடி ஆதங்கம்..

உன்..
மடிதனில் தவழ்வதே
எனது
வாழ்வின் பேரின்பம்..!

என் மூச்சிலே
என் பேச்சிலே
உன் வாசம் வீசும்..

வானம் எங்கும்
தேவர் கூட்டம்
வந்து வாழ்த்தட்டும்..

வாழ்நாளெல்லாம்
உன் ஞாபகம்
தீராத மோகம்...

நீயும் நானும்
சேரும் நேரம்
பூமி பூப்பூக்கும்...

நிஜமே வா..
நினைவே வா..
என்
உயிரின் உருவே வா..
நெஞ்சில் என்றும்
நீயிருந்து..
நீண்ட அமைதி தா..

சுகமே வா..
சுவையே வா..
என்
சோகத் தீர்வே வா...
சாகும் போதும்
நீயிருந்து..
சந்த கீதம் தா..!

-K.கிருஷ்ணமூர்த்தி

Friday, March 6, 2009

குறைகள்..

அது
இல்லாமல் இருக்க
நாம்..
இறையும் அல்ல..

அதைச்
சுட்டுபவர்கள்
நக்கீரர்களும் அல்ல..!

குறைகளை களையவே
மனிதப் பிறப்பு..
குறைகளை
களைந்துவிட்டால்
இனி ஏது பிறப்பு..??

இங்கே..
யாருக்கு இல்லை
குறை..?

குறையுள்ளவந்தானே
நிறையைத் தேடி
அலைகிறான்..

பையின் கணம்
குறையும்போது
பணத்தைத் தேடி
அலைகிறான்..

அனைக்கும்
அன்பு
குறையும்போது
காதலைத் தேடி
அலைகிறான்..

உடலில்,
வாலிபம்
குறையும்போது
வாழ்க்கையைத் தேடி
அலைகிறான்..

வாழ்க்கையின்
வாலிபம்
குறையும்போது
கடவுளைத் தேடி
அலைகிறான்...!!!

நண்பா..

குறைகளைக் கண்டு
குரைப்பதும்..
நிறைகளைக் கண்டு
நகைப்பதும்..
இயந்திர மனிதனின்
இயற்கை..

அதைச்
சிலர் செய்யாதிருப்பதுதான்..
செயற்கை..!!

குறைகளின்
குணங்களை
குறிப்பறிவதை விட்டுவிட்டு..

குறைகளில்
நிறையைக் காண்போம்..
எழுந்து வா....!!!!!!!


K. கிருஷ்ணமூர்த்தி

Wednesday, March 4, 2009

வேறென்ன வேண்டும்..?!


நிலவே நீ பெண்ணாக வேண்டும்..
  • நட்சத்திரங்கள் கண்ணாக வேண்டும்..

இளவே னில்நீ நடந்துவர வேண்டும்..

  • இளமை சுகங்கள் கடந்துவர வேண்டும்..

மலரே!என நான்வியக்க வேண்டும்..

  • மனதில் வந்து மயக்க வேண்டும்..

நிலமே உன்னை ரசிக்க வேண்டும்..

  • நீஎன்னில் மட்டும் வசிக்க வேண்டும்..


கைவளை சத்தம் கேட்டிட வேண்டும்..

  • கனிந்த முகத்தில் விழித்திட வேண்டும்..

சைகையில் என்னை அழைத்திட வேண்டும்..

  • சிறுவன் என்னை குளிப்பிக்க வேண்டும்..

கைவிரல் கொண்டு துவட்டிட வேண்டும்..

  • காதில் காதல்கதை சொல்ல வேண்டும்..

மைவிழி மெல்ல மலர்ந்திட வேண்டும்..

  • மௌனம் கலைந்து சிரித்திட வேண்டும்..



தலைமுடி எண்ணிப் பார்க்க வேண்டும்..

  • தாமரை இதழ் சுவைத்திட வேண்டும்..

சிலைமேனி என் விரல்தீண்ட வேண்டும்..

  • சீலை களைய சினுங்கிட வேண்டும்..
கலைமான் கண்கள் கவிழ்ந்திட வேண்டும்..
  • காமன் கலைகள் பயின்றிட வேண்டும்..
களைப்பால் உன்மடி சாய்ந்திட வேண்டும்..

  • காலைப் பொழுதில் உறங்கிட வேண்டும்..

    -K.கிருஷ்ணமூர்த்தி

Monday, March 2, 2009

தாஜ்மஹால்

உன்னை,
காதல் சின்னம்
என்கிறார்கள்
சில,
கல்நெஞ்சக்காரர்கள்..

உன்னைப்
புகைப்படமாக்கி..
புனித காதலுக்கு
பரிசளிக்கிறார்கள்
பைத்தியக்காரர்கள்..!

சுயநலக்காரன்
ஷாஜஹானை
சரித்திரத்தில் வைக்கின்றன
சில,
ஜடங்கள்..!!!

நீயே சொல்..
மும்தாஜின் சமாதியா நீ..???!!
இல்லை..
உன்னைக்
கொஞ்சம் புரிந்தவன்
சொல்கிறேன்..

உனக்கு
உயிர்தந்த
ஆயிரமாயிரம்
தச்சர்களின்
சமாதி நீ..

கோடிக்கணக்கில்
இல்லத்துக் கிழத்திகளை
நடைபிணங்களாக்க்கிய
பாவத்தின்
சின்னம் நீ...!

மும்தாஜ்
மீண்டும் உயிர்பெற்றிருந்தால்..
காதலர் 'கோர்ட்டில்'
உன்னிடம்
விவாகரத்து கோரியிருப்பாள்..

தன்,
தூய காதலை
மாசுபடுத்திவிட்டான் என்று..
மான நஷ்ட வழக்கு
தொடுத்திருப்பாள்..!!

காதல் கொலைகாரன்
ஷாஜஹானை
எண்ணெயிலிட்டு
வாட்டச்சொல்லி..
எமனுக்கும்..
கருணை மனு
போட்டிருப்பாள்..!

இறுதியில்..
பாவத்தில்
தன் பங்கு தொலைந்திட
தீக்குளித்திருப்பாள்
அந்த
தெய்வப் பெண்...!!!

-K.கிருஷ்ணமூர்த்தி

(இது யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கவிதை அல்ல.. )










என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs