Wednesday, November 15, 2017

மலேசியாவில் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குகின்றனர். அந்த பெற்றோர்கள் தமிழின் மேன்மையை உணர வேண்டுமென்ற நோக்கில்..

கற்போம் தமிழ்..!

தமிழ்..
அயல்நாட்டினரெல்லாம்
அழகாய் பேசும் மொழி…
தமிழன் மட்டும் தவ’ரா’ய்
பேசும் மொழி..!

தமிழ்..
உயிரின் மொழி
உளவியல் மொழி..
அறிவின் மொழி
அறிவியல் மொழி..

உடம்பின்
அறிவியல் மட்டுமல்ல..
உயிரின்
அறிவியலையும் சொல்லும்
ஒரே மொழி!

தமிழ்..
அன்பின் மொழி
பண்பின் மொழி..
அகத்தின் மொழி
ஜகத்தின் மூத்த மொழி!

தாய்ப்பாலோடு
தமிழ்ப்பால்
உண்ட குழந்தைகள்
தாயைப் பழிப்பரோ
என்னாளும்..?!

தமிழ்..
நாகரீகம்
வளர்த்த மொழி
நான்திசையும்
வென்ற மொழி..

பல
ராஜ்ஜியங்களை
வென்ற இராஜராஜ சோழன்
ரௌத்திரம் கற்றதும்
தமிழில்தான்..!!!

தமிழ்..
ஞான மொழி
ஞால மொழி..
வாழ்க்கை மொழி..
நாம் வாழும் வழி..!

வாழும் கலையும்
வாழ வைக்கும் கலையும்
எண்ணற்ற இலக்கியங்கள்
கண்டதும் தமிழில்தான்..!!!

***

ஹார்ட்வர்டில்
இருக்கை கிடைத்தது..
தமிழன் மனமோ
இரு கை விரிக்கிறது..!

***

தமிழ்
சோறு போடுமா?

கேடு கெட்ட
தமிழன் மட்டுமே
கேட்கும் கேள்வி..!

தமிழ் கற்றவன்
எல்லாம் என்ன..
பட்டினி
பிணமானானா?

இருநூறு வருட வரலாறு
மலேசிய
பள்ளிகளில் தமிழ்..

இன்று
இருநூறு பள்ளிகளுக்கு மேல்
மாணவர்
பற்றாக்குறையில் 
தமிழ்பள்ளி!

தோழா..
உணர்ந்துகொள்..!

திருப்புகழ் பாடினால்
ஆயுள் நீளும்..
திருக்குறள் சொன்னால்
வாழ்வு செழிக்கும்..

சிவஞான போதம் புரிந்தால்
மெய்ஞானம் விரியும்
திருமந்திரம் ஓதினால்
விஞ்ஞானம்  விளங்கும்..!

திருமந்திரம் ஓதினால்
விஞ்ஞானமே வணங்கும்..!

தோழா..
புரிந்துகொள்..
உணர்ந்துகொள்..
துணிந்து நில்..!

உலகமே போற்றும்
தமிழ்தான்..
மொழிகளில் சிறந்தது!

தமிழனாய் பிறக்கும்
பிள்ளைகளுக்கெல்லாம்
தமிழ்வழிக் கல்வியே
மிகச் சிறந்தது!

உன் பிள்ளையின்
தமிழ் எழுத்து
செம்மையானால்..

சமுதாயத்தின்
தலையெழுத்தும்
செம்மையாகும்..!!

                  --- கவித்தமிழ் கிருஷ்ணமூர்த்தி

Saturday, January 28, 2017

காங்கேயம்..


ஏறு தழுவ வீறு கொண்ட
வீரத் தமிழா..
ஆறு சொல்லி கூடி வந்தாய்
கூறு தமிழா..

அடி மேல் அடித்தால்
அம்மிதான் நகரும்நீ
இடிபோல் முழங்கினாய்
இந்தியாவே நகர்ந்தது..!!

அரசியல் வாதியால் ஆகாததை
ஆறே நாட்களில் சாதித்தாய் – இனி
அரசியலுக்கு நீ வந்தால்
பூரிப்பாள்நம் பாரதத் தாய்..!

இங்கே இருப்பவன் எல்லாம்
ஏலம் போன அரசியல்வாதிகள்
சேலைக்குள் அடங்கும் 
சுயநலவாதிகள்..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

பெப்சி கோலா மட்டும் இல்லை– இங்கே
இறக்குமதியே தேவை இல்லை..!!

ஜீன்ஸ் டீசர்ட் துறந்தால்
நெசவாளி வாழ்வான்
பீசா பர்கரை மறந்தால்
விவசாயி வாழ்வான்.. !!

பெப்சி கோலா மட்டும் இல்லை – இங்கே
இறக்குமதியே தேவை இல்லை..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

சினிமா தாகம்
வெளி நாட்டு மோகம்
எல்லாம் மறப்பாய்..
உன் தாய் நாடு வளமாக
இன்றே வகுப்பாய்..!

தை பிறந்தால் வழி பிறக்கும்
இந்த 2017 தைக்கு பிறகு
தமிழ்நாடே சிறக்கும்..!!

சரித்திரம் காணா 
மாட்டுப் பொங்கல்,
சமுத்திரமாய் தமிழன் 
இணைந்த பொங்கல்..

ஒற்றுமைக்கு வித்திட்ட 
பீட்டாவுக்கும் 'நன்றி! எங்கள்
உணர்வுக்கு 'உரமூட்டிய'
'லத்தி'துறைக்கும் 'நன்றி!!!"

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

பீட்டா என்பது பொருட்டல்ல- நீ
டாட்டா சொல்வது பெரிதல்ல- உன்
பாட்டன் வழியில் வாழ்ந்தாலே – வால்
ஆட்ட மாட்டான் எவனும் இனி..

தமிழ்நாடு என்பது பெரும் சந்தை – அங்கே
தமிழினம் வாடுவது பெரும் விந்தை..
தமிழனின் பொருட்கள் வாழ்ந்தாலே
தமிழனும் வாழ்வான் மறவாதே..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

காங்கேயம் காளைகளால்
சரித்திரம் படைத்தாய் - இனி
அதுவே சின்னமென்று
சாதிக்க வருவாய்..!!

மஞ்சள் முருங்கை எல்லாம்
மாற்றானிடம் விட்டது போதும்!
உரிமமும் உரிமைதான்
ஊருக்கு உரைப்பாய்..

காங்கேயம் என்பது உன் சின்னம் - இனி
வெங்காயம் ஆனாலும் காங்கேயம்!
காங்கேயம் என்பதை உரிமம் செய் - அதை
வாங்காமல் துயில் இல்லை உறுதி செய்!

கட்சியும் காங்கேயம் – வியாபார
புரட்சியும் காங்கேயம்..
நிச்சயம் வெல்லும் காங்கேயம்
உச்சிக்கு உயரும் காங்கேயம்..!!

காங்கேயம் சின்னத்தை – இனி
சட்டையில் பொறிப்பாய்
அதில் வரும் உரிம நிதியை
கட்சிக்கு சேர்ப்பாய்..!!

இனி,
உலகம் முழுவதும் காங்கேயம்..
உலகத் தமிழனும் பங்கேற்பான் – இதில்
கலகம் புரிந்திட நினைத்தாலே - அவனை
விலக்கி வைக்கவும் காங்கேயம்..!!

வாழ்க வாழ்க காங்கேயம்..!!
வாழ்க எங்கள் ஜல்லிக்கட்டு
வாழ்க வாழ்க காங்கேயம்
வானும் அதிர்ந்திட மார்தட்டு..!!!!

                       -கவித்தமிழ் கிருஷ்ணமூர்த்தி

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs