பக்தி யோகம்
பகுதி 6
பல்கலைக்கழக
பொங்கல் இதழில்
பிரசுரமான
என்
கவிதை
“தமிழைப் புறக்கணிக்கும்
தலைமைத்துவம்..”
கேத்தரின்
அதைப்படிக்க
கேட்டு நெகிழ்ந்திருக்கிறாள்
சீதா..
“ரொம்ப நல்லா இருந்திச்சி”
அவள் சொன்ன
அந்த மூன்று வார்தைகளில்
சாகித்திய அகாடமி
பெற்றேன்..!
“எனக்கும் ஒரு கவிதை எழுதுவிங்களா?”
“காத்திருக்கிறேன்”
என்று
உள்ளூர சொல்ல நினைத்தாலும்
அமைதியாக கேட்டேன்..
“எதைப் பத்தி எழுத?”
“வாழ்க்கை..”
காதலை கேட்பாள்..
அல்லது
இயற்கையை கேட்பாள்
என்றெல்லாம் எண்ணிய
எனக்கு..
வாழ்க்கையை
அவள் கவிதையாக கேட்டது
ஆச்சர்யம் அளித்தது..
“நாளைக்குத் தர்றேன்..”
என்றேன் அமைதியாக..
ஒரு நாளில் எழுதுவது
சாத்தியமா
என்று வியந்தாள்..
இப்படி ஒருத்திக்கு
கவிதை எழுதிக் கொடுக்க..
ஒரு நாள் தேவையா?
கவிதை உலகம் பழிக்குமே
என்று
வருந்தியது
அவளுக்கு தெரிய ஞாயமில்லை..!
அன்றைய
அலுவல்களை
அப்படியே விட்டுவிட்டு
‘வாழ்க்கையை’ வடிக்கத்
தொடங்கினேன்..
சில மணி நேரங்களில்
‘வாழ்க்கை’
காகிதத்தில் கனிந்து நின்றது!
*****
இன்னமும் விடியவில்லை..
விழிகளில் துளியும்
உறக்கமுமில்லை..
சூரியக் கிரணங்கள்
பூமியைத் தொடும் முன்னே
என் கால்கள்
நூலகத்தை தொட்டுவிட்டன..
இளஞ்சூரியனின்
சிகப்புச் சிதறல்கள் நடுவே
வானவில்லை அணிந்த
அதே நிலவு
நெருங்கி வந்தது..
என்ன அழகு..
தென்குமரி சூரியோதயம்
தோற்றுவிடும்!
புன்னகை கூட
பேரின்பம் என்று
அன்றுதான் உணர்ந்தேன்..
அந்த புன்னகையின்
விலையாக
கைகளில் கொண்டுவந்த
என்
‘வாழ்க்கையை’
அவளிடம்
அன்றே கொடுத்துவிட்டேன்..!
-‘வாழ்க்கை’ தொடரும்
-K.கிருஷ்ணமூர்த்தி
(இந்த கவிதையில் காணப்படும் கவிதைகள், “தமிழைப் புறக்கணிக்கும் தலைமைத்துவம்”, “வாழ்க்கை” ஆகிய இரண்டு கவிதைகளும் எனது வலைப்பூவில் இருக்கின்றன.)
எது காதல்? -அத்தியாயம் 1
5 years ago